
கட்டுகள் கொண்ட ரூ.45.2 லட்சம் கள்ள நோட்டுகள், இயந்திரங்கள் பறிமுதல்
* அச்சடித்து கொடுத்த பிரஸ் உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
சென்னை: சென்னை முழுவதும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 கட்டுகள் கொண்ட ரூ.45.2 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி (26). இவர் தனது சகோதரன் தினேஷுடன் இணைந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் மாலை நேரம் எப்போதும் அதிகளவில் கூட்டம் காணப்படும். இதனால் மணியின் உதவிக்கு வீராசாமி என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக மணி நடத்தும் காய்கறி கடையில் ரூ.500 கள்ள நோட்டுகளை கொடுத்து காய்கறிகள் வாங்கி சென்றுள்ளனர். கடையில் வியாபாரம் முடிந்து, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்தமாக வாங்க தங்களிடம் உள்ள பணத்தை கொடுக்கும் போது, வியாபாரிகள் இது கள்ளநோட்டு என கூறியுள்ளனர். எனவே, தங்களது காய்கறி கடையில் புத்தம் புது ரூபாய் நோட்டுகள் யார் கொடுத்தாலும், மணி மற்றும் தினேஷ் ஆகியோர் ஒருமுறைக்கு இரண்டு முறை சரிபார்த்து வாங்கி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், மணியின் காய்கறி கடையில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. அப்போது வயதான ஒருவர் ரூ.670க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கிவிட்டு 2 புதிய ரூ.500 நோட்டுகளை கொடுத்துள்ளார். உடனே, கடையில் பணிபுரியும் வீராசாமி வழக்கத்தை விட இந்த ரூபாய் நோட்டுகள் சற்று வழுவழுப்பாக இருப்பதை பார்த்து, உரிமையாளர் தினேஷிடம் கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி சரிபார்த்த போது, அது கள்ள ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. உடனே தினேஷ் மற்றும் கடை ஊழியர் வீராசாமி ஆகியோர் கள்ள நோட்டுகளை கொடுத்த முதிவரை பிடித்து வைத்துக்கொண்டு அவரை சோதனை செய்தனர். அவரிடம் மேலும் இரண்டு ரூ.500 கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், முதியவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, பள்ளிக்கரணை பாலாஜி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை (64) என்பதும், ராணுவத்தில் பணியாற்றிய போது ஒழுங்கீனமாக செயல்பட்டதால் அவரை 10 ஆண்டுகளில் நிரந்தர பணி நீக்கம் செய்து வெளியே அனுப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் கள்ள ரூபாய் நோட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடத்திய போது, விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனி 3வது தெருவை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியன் (62) கொடுத்து காய்கறிகள் வாங்கி வர சொன்னதாக தெரிவித்துள்ளார்.