ராமநாதபுரம்: மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்திர தீர்வு. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு இதை நிறைவேற்றும் என்று ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்து உள்ளார். திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் மீனவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்தார். நேற்று மண்டபத்தில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்திய மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், 14,000 பேருக்கு ரூ.88 கோடியே 90 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தொடர்ந்து மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைதாவதையும் இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக 2014ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்ததற்குப் பின்னால்தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கிறது. கைது, தாக்குதலை தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை இலங்கை அரசு பறித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. படகுகளை அரசுடைமையாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகயிருக்கிறது. 

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாம்பனில் பாஜ சார்பில் ‘கடல் தாமரை’ போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மறைந்த சுஷ்மா சுவராஜ் இங்கே வந்திருந்தார். ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார். இந்த 9 ஆண்டு காலத்தில் இது நடந்திருக்கிறதா? இதே ராமநாதபுரத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேசிய மோடி, “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்து வருகிறது.  

இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்” என்று சொன்னார். நாங்கள் கேட்கிறோம், பாஜ ஆட்சியில் இருக்கும் இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா? மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால் இந்தியாவில் வலுவான அரசு அமையவேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன் என்று குமரிக்கு சென்று 2014ம் ஆண்டு ஏப்ரலில் பேசினார் மோடி. சபதத்தை நிறைவேற்றி விட்டாரா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். 

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்னை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்னை. இரண்டு மாநில மீனவர்களையும் இணைத்துப் பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாரே மோடி? 2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தவில்லையா? 2015, 2016ம் ஆண்டுகளில் தாக்குதல் தொடர்ந்தது. 2017ல் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கின்ற நிலையிலும் நம் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறது. 

ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் அவர்கள் ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள். 2020ம் ஆண்டு முதல் இன்று வரை, தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கை கடற்படையினர் 48 தாக்குதல் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள். மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 604 மீனவர்களையும் 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram