சென்னை: தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெற, குற்ற நிகழ்வுகளை தடுத்திட அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஆவடி காவல் ஆணையர் சங்கர், மதுவிலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அதேபோல், அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்த காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உருவாகாமல் மிக மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். இதற்காக, காவல்துறையில் உள்ள ஆளிநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர்கள், கிடைக்கப்பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல, நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி, எந்த ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும். மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல் துறையின், பணித்திறன் பன்மடங்கு மேம்படும். கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் சில ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க, காவல்துறையின் மாவட்ட அதிகாரிகள், ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதனையும், ஊடகங்களுக்கு தெரியப்படுத்திவர வேண்டும். முக்கிய நிகழ்வுகளில் சரியான தகவல்களை பத்திரிகைகள் வாயிலாக மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் காவல்துறை இயக்குநர் தெரியப்படுத்துவதும் நல்ல பலனை அளிக்கும். 

நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆகையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அடுத்து, நான் மிக முக்கியமாக குறிப்பிட விரும்புவது, பாலியல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்துபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இத்தகைய குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். 

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணை ந்து மேற்கொண்டதால் கள்ளச்சாராய விற்பனை குறைந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை சில சமயங்களில், சில சமூக ஊடக செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை தீவிரமாக கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களை பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் ஆளிநர்கள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் அவர்களின் பணியில் ஈடுபட்டு, சரியான நுண்ணறிவு தகவல்களை பெற்று, எந்த ஒரு சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். காவல் துறை சிறப்பாக செயல்பட, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதி பெற்றுத் தருவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இறுதியாக, நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக, மேலும் வளர்ச்சி பெற, குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைத்திடவும், தடுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram