
சென்னை: வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காஞ்சிபுரம் வழியாக சென்றார். அப்போது காஞ்சிபுரம் – மதுரமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவர் பணியில் இல்லை. ஆனால் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டுள்ளார், உடனடியாக அமைச்சர் சுப்பிரமணியன், சம்மந்தப்பட்ட மருத்துவரை செல்போனில் அழைத்து விவரத்தை கேட்டார். அதற்கு அந்த மருத்துவர் தான் ஆயுஷ் நிகழ்ச்சி மாற்றுப் ணியில் இருந்ததாக கூறினார்.
அந்தஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண் ஒருவரும் மற்றும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மருத்துவர் பணியில் இல்லாமல் கூறும் காரணம் முன்னுக்குப் பின் முரணாக உள்ள காரணத்தினால், அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.