* ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகம் 

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்க உள்ளது. இதில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கு அலுவல்கள் முறைப்படி மாற்றப்பட உள்ளன. அதோடு, சர்ச்சைக்குரிய மசோதாக்களையும் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளும் வியூகம் அமைத்துள்ளன. 
நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட், மழைக்காலம் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை கூடுவது வழக்கம். கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படும் என கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக சிறப்பு கூட்டத்தொடர் என எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றம் செய்வது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இந்த சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருக்கலாம் என கணிப்புகள் வெளியாகின. இதற்கிடையே, சிறப்பு கூட்டத்தொடரில் 75 ஆண்டு கால நாடாளுமன்றத்தின் வரலாற்று பயணம் குறித்து விவாதிக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு அறிவித்தது. 

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, அனைத்து கட்சி கூட்டத்தை ஒன்றிய அரசு நேற்று நடத்தியது. இதில், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் மணிப்பூர் விவகாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், சிறப்பு கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. இதில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட வேண்டுமென ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் அனைத்து கட்சி கூட்டத்திலும், சிறப்பு கூட்டத்தொடரின் அலுவல்கள் குறித்து அரசு வெளிப்படையாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். கூட்டத்திற்குப் பின் கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் கே.மணி அளித்த பேட்டியில், ‘‘அரசு எதையோ மறைக்கிறது. இதுவரை சிறப்பு கூட்டத்தொடரின் அலுவல் பட்டியல் குறித்து முழுமையாக தகவல் தெரிவிக்கவில்லை’’ என்றார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். அரசு தனது அலுவல் பட்டியல்களின்படி சிறப்பு கூட்டத்தொடரை நடத்தும்’’ என்றார். இன்றைய முதல் நாள் கூட்டத்தில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது. இதில், நாடாளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இதைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினமான நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அரசு அலுவல்கள் முறைப்படி மாற்றப்பட உள்ளன. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் திறந்து வைத்தார். நாளை முதல் புதிய நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram