சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் தற்போது ஏற்கப்பட்டுள்ளது. அதில், பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும், அவர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53, இதர பிரிவினருக்கு 58 ஆக வயது தளர்வு செய்யப்படும், 171 தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்படும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை அறிவித்தார்.
சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில், கடந்த 10 நாட்களாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இரவு பகலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேரடியாக இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டதுடன், முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இருப்பினும், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுடன், பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியத்திலாவது பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நடைமுறைகள், பணி நியமனம் வழங்குவதற்கான நெறிமுறைகள் குறித்து இயக்குநர் தெரிவித்தார். அவரின் பதிலில் திருப்தி அடையாதவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், முதல்வரின் பார்வைக்கு இந்த கோரிக்கை எடுத்து செல்லப்பட்டது. மேலும், அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்தார். இருப்பினும், மேற்கண்ட் சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் டிபிஐ வளாகமே ஆசிரியர்களால் நிரம்பி வழிந்தது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், வெளியாட்கள் யாரும் அந்த வளாகத்துக்குள் நுழையாமல் பரிசோதித்து அனுப்பினர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து சங்கங்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்ல கேட்டுக் கொண்டனர். ஆனால், யாரும் அங்கிருந்து செல்லத் தயாராக இல்லை என்று தெரிவித்து அதே இடத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் மற்றும் கோரிக்கை குறித்து விவரமாக எடுத்துக் கூறியதுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை கேட்டார்.
அதன்தொடர்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பத்திரிகயைாளர்களை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சந்தித்து கூறியதாவது: தமிழ்நாட்டு முதல்வருடன் நாங்கள் இரண்டு, மூன்று நாட்களாக ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து தெரிவித்தோம். அவர்களின் கோரிக்கைகளில் இப்போதைக்கு என்ன கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்று கேட்டார். அதன்மீது ஆலோசனையும் வழங்கினார். அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்க உள்ளேன்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கோரிக்கைகள் சார்ந்து அரசின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சமவேலைக்கு சமஊதியம் கேட்கும் கோரிக்கையின் அடிப்படையில், 6வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, பல்வேறு துறைகளில் 1.6.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 குழு அமைத்து அரசாணை 25 வெளியிடப்பட்டது.
அதில் அரசு நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் 3 காலத்துக்குள் இறுதி செய்யப்பட்டு முதல்வர் அதன் மீது உரிய முடிவெடுக்க சமர்ப்பிக்கப்படும். இதை ஏற்று எண்ணும் எழுத்து திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடப்பதாலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மேற்கண்ட பயிற்சியில் சேருமாறும், பயிற்சியை முடித்து பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பகுதிநேர ஆசிரியர்கள்: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தற்போது பணியில் இருப்போர் 10,359 பேர். அவர்கள் அனைவரும் தொடக்கத்தில் ரூ.5 ஆயிரம் மாத ஊதியத்தில் நியமிக்கப்பட்டு தற்போது ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் முந்தைய கோரிக்கையான ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது மற்றும் அவர்கள் விரும்பிய மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவது என்பதை அரசு ஏற்று அதை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்ேபாது நிதி நெருக்கடி இருந்தாலும், இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2,500 ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் அவர்கள் கேட்காத கோரிக்கையான அவர்கள் அனைவருக்கும் ரூ. 10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு அறிமுகம் செய்யப்படும். அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும். எனவே இதையேற்று வேலை நிறுத்தத்தை கைவிட்டு பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்துள்ளவர்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 என்றும், இதர பிரிவினருக்கு 58ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.